கன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசை
ADDED :1253 days ago
உத்திரமேரூர்: சாத்தணஞ்சேரி, கன்னியம்மன் கோவில் ஆடி மாத விழா விமரிசையாக நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சாத்தணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், பாலாற்றங்கரையில், பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் விழா நடப்பது வழக்கம்.அதன்படி இந்தாண்டிற்கான விழா 1ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். அதை தொடர்ந்து, அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, நள்ளிரவு வரை அப்பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தார். வீடுதோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.