ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்திரசயனர் கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்ஸவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 9:30 மணிக்கு கொடிபட்டம் மாட வீதிகள் சுற்றி வடபத்திரசயனர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 11:00 மணிக்கு பாலாஜி பட்டர் கொடிபட்டம் ஏற்றி, தீபாரதனை வழிபாடு செய்தார். கோயில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வடபத்திரசயனர், ஸ்ரீதேவி, பூமாதேவியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜ், கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளல், இரவு 8:00 மணிக்கு வீதி புறப்படும் நடக்கிறது. அக்டோபர் 3 அன்று சயன சேவை, அக்டோபர் 5 அன்று காலை 7:25 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது. அக்டோபர் 10 அன்று பகல் பத்து மண்டபத்தில் புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.