குடும்பம் விருத்தி.. தொழில் முன்னேற்றம் பெற இன்று வீட்டில் எம தீபம் ஏற்றுங்க..!
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். மாகாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “எம தீபம்” என சாஸ்திரம் கூறுகிறது. அத் தீபத்தை நீங்கள் தீபாவளிக்கு முன்பு வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.
சாத்திரப்படியான எம தீபம் ஏற்றும் முறை:
உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் கிளியாஞ்சட்டியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும். முடியாதவர்கள் வீட்டு வாசலில் ஏற்றலாம். விளக்கேற்றிய பின்னர், உங்கள் முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் நினைக்க வேண்டும். பின்னர் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ எமாய நம: எமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய
சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி: என சொல்ல வேண்டும். அப்படி சொல்ல இயலாதவர்கள் சிவாய நமஹ, என சொல்ல வேண்டும் விளக்கு தானாக அணைய வேண்டும். அணைந்த விளக்கை வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாது. கால் படாத இடத்தில் போட வேண்டும். இந்த வருடம் இன்று (22.10.22) சனிக்கிழமை மாலை 5.28 மணிக்கு திரயோதசி திதி ஆரம்பிக்கிறது.
நாளை ( 23.10.22) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.49 மணிக்கே திதி முடிந்து விடுவதால் சனிக்கிழமை மாலையே எம தீபம் ஏற்றலாம்.