திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழா
ADDED :1086 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் தெய்வானை மட்டும் எழுந்தருளினார்.
அம்பாள் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடந்தது. அரிசி, வெல்லம், நெல், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன்பு மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனித நீர் அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டது. கொரோனா தடை உத்தரவுக்கு பின்பு இரண்டு ஆண்டுகளுக்குபின் ரத வீதிகளில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது.