சீர்காழி குமர கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மயிலாடுதுறை: சீர்காழியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு குமர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமரக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வள்ளி தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் அசுரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது மாலைப் பொழுது இருள் வந்து விட்டதால் இந்திரன் அமைத்த கோவிலில் தங்கி மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள் தாம் வீற்றிந்தருளிய கோவிலில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின் பிரமபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார். குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு அங்கு தானே தங்கியதால் இக்கோயில் குமரக்கோட்டம் என புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த நான்காம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது நான்காம் கால யாகசாலை பூஜை இன்று நிறைவடைந்ததையொட்டி காலை 9 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள், சுவிட்சர்லாந்து விஷ்ணு துர்க்கை கோவில் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சரஹணபவ சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கருத்தில் இருந்த புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆடிட்டர் குரு சம்பத்குமார், டாக்டர் முத்துக்குமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, திமுக நகர பொருளாளர் சங்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக வர்ணனைகளையை பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் அழகிரிசாமி, டாக்டர் சரவணன் ஆகியோர் செய்தார். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.