உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் தீபக்கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.. நாளை மஹா தீபம்

திருவண்ணாமலையில் தீபக்கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.. நாளை மஹா தீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு கார்த்திகை தீப திருவிழா கடந்த, 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக நாளை, பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு கருவறை எதிரில்  பரணி தீபம் ஏற்றப்படுகிறது. ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான கொப்பரை மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும் 1,150 மீட்டர் காடா துணியாலான திரி தயாராக வைக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ண ரோஜா, சாமந்தி பூக்களால்  தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக பாடல்கள் ஒலித்தபடி, தீபத்திருவிழாவால் கோவில் மட்டுமின்றி திருவண்ணாமலை நகரமே, களை கட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !