நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார 1008 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 21 வகை அபிஷேக பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் நடந்தது. பின் கைலாசநாதர் சாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின் கோவில் வளாகத்தில் 1008 சங்குகள் மற்றும் வெள்ளியால் ஆன சங்கு, பல வண்ண மலர்கள், நெல் மணி, சிவன், விநாயகர் படம் உள்ளிட்டவைகளை கொண்டு சங்குகள் அலங்கரிக்கப்பட்டது. அதன் முன் யாக குண்டம் வளர்த்து சிறப்பு யாக பூஜை நடந்தது. பின் பூஜை செய்யப்பட்ட 1008 சங்குகளையும் எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பக்தர்கள் கோவிலை சுற்றி வந்தனர். அதன் பின் சங்குகளில் உள்ள தீர்த்தங்களை கொண்டு கைலாசநாதருக்கு சங்காபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் நத்தம்,கோபால்பட்டி, சாணார்பட்டி, செந்துறை, மணக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.