திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா துவக்கம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் நேற்று துவங்கியது. கோயிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு மூலவர் சத்யகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து திருமுறை பாடப்பட்டது. பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பாடாகி கோயில் திருவாட்சி மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று எழுந்தருளினார். சிவாச்சாரியார்களால் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு, கோயில் ஓதுவாரால் திருவெம்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சி ஜன. 4வரை நடைபெறும். ஜன. 5அன்று காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் நிகழ்ச்சியும், இரவு கோயிலுக்குள் கண்ணூஞ்சல் முடிந்து சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி கோயில் முன்பு அமைக்கப்படும் சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடைபெறும். ஜன. 6 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துப்படியாகி உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தனித்தனி பூ சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் கிரிவலம் சென்று அருள்பாளிப்பர்.