உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்க்கையன் கோட்டையில் ராகவேந்திரர் 405 வது பட்டாபிஷேக விழா

மார்க்கையன் கோட்டையில் ராகவேந்திரர் 405 வது பட்டாபிஷேக விழா

சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில பீடாதிபதி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தேனி மாவட்டத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் ஒன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மார்க்கையன் கோட்டை அக்ராஹரத்தில் " ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் " என்ற பெயரில் கும்பாபிஷேகம் நடத்தி துவக்கி வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் இருந்து தலைமை ஆச்சார்யார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட ஆச்சார்யர்கள் பங்கேற்று இந்த கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள். இங்கு ராகவேந்திர சுவாமிகள், இராமர், சீதை உள்ளிட்ட பல தெய்வங்கள் எழுந்தருளியுள்ளன. தினமும் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுகிறது. மார்க்கையன்கோட்டை மட்டுமின்றி சுற்றிலும் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ராகவேந்திரரை தரிசனம் செய்கின்றனர் . இந்த கோயியிலில் நேற்று ஸ்ரீ ராகவேந்திரரின் 405 வது பட்டாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரூ மத்வாச்சாரிய மூல மகா சமஸ்தானம் உத்தராதி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சத்ய ஆத்ம தீர்த்தர் பங்கேற்று பட்டாபிஷேக நிகழ்வுகளை மேற்கொண்டார். முன்னதாக மத்வாச்சாரியரின் த்வைத ஞானப் பாடங்கள் பற்றி விளக்கினார். தொடர்ந்து ராகவேந்திர சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், ஸ்ரீ மூல ராமரின் பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக முல்லைப் பெரியாற்றில் தண்ட தீர்த்த ஸ்நானம் உள்ளிட்ட புனித கிரியைகள் நடைபெற்றது . முல்லைப் பெரியாற்றில் நீராடிய பீடாதிபதிகள் தண்டத்தின் மூலம் பக்தர்களுக்கு நீர் தெளித்து ஆசி வழங்கினார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !