திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் நிகழ்வான மார்கழி மாதத்தில், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மேளதாளம் முழங்க, தங்க கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னதி முன் உள்ள, 63 அடி உயர தங்க கொடிமரத்தில், நேற்று காலை, 6:12 மணிக்கு தனுார் லக்னத்தில் கொடி ஏற்றம் நடந்தது. விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும், தினமும், காலை, இரவு சுவாமி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும், 15ல், தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.