திருப்பரங்குன்றம் கோயிலில் தேர் முகூர்த்தம்; தராசு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் முகூர்த்தம், தேங்காய் தொடும் முகூர்த்தம், தராசு முருகப் பெருமானுக்கு பூஜை இன்று நடந்தது.
கோயிலில் இருந்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மாலை, சந்தனம், குங்குமம் மேளதாளத்துடன் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் அலுவலகம் சென்றனர். அங்கு அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முக சுந்தரத்திடம் தேங்காய் பழம், பங்குனி திருவிழா விவரங்கள் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டு திருவிழாவிற்கான நாட்கள் குறிக்கப்பட்டது. பின்பு கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு யாக பூஜை நடந்தது. கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய வைரத்தேரில் உள்ள விநாயகர், பெருமாள், சிவபெருமான், கருப்பணசுவாமி, தராசு முருகப்பெருமானுக்கு பூஜை, தீபாராதனை முடிந்து சுத்தியல், உளி ஆகிவற்றிற்கு பூஜை நடந்தது. மார்ச் 23 அன்று காலை 6:45 முதல் 7: 15 மணிக்குள் பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது.