சிவன், விஷ்ணு கோயில்களில் மார்கழி மகா உற்சவம் நிறைவு
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் மார்கழி மகா உற்சவம் நிறைவடைந்தது.
மாதங்களில் மார்கழி என்பது பகவானுக்கு உரிய மாதமாகும். இந்த 30 நாட்களிலும் அதிகாலை மக்கள் கோயிலுக்கு சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் அருளிய திருவம்பாவை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், கால பைரவாஷ்டமி, கூடாரவல்லி என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டன. இந்நிலையில் நேற்று காலையுடன் அனைத்து கோயில்களிலும் மார்கழி மகா உற்சவம் நிறைவடைந்தது. இதனையொட்டி பரமக்குடி சுந்தரராஜ பெருமாள், மீனாட்சி அம்மன், ஈஸ்வரன், அனுமன் கோயில், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் என பக்தர்கள் திரளாக கோயிலுக்கு சென்று அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று தை மாத பிறப்பு பொங்கல் விழாவையொட்டி அனைத்து கோயில்களும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.