பொங்கல் பண்டிகையன்று மருதமலையில் மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை
ADDED :1330 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை, பொங்கல் தினத்தன்று, மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை, தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு, அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், வரும் 15ம் தேதி ஒரு நாள் மட்டும், காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் மலைக்கு மேல் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு, கோவில் மூலம் மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.