கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் மாசிமகத் தேரோட்டம் கோலாகலம்
தஞ்சாவூர் : மாசிமகத்தையொட்டி கும்பகோணம் சக்கரபாணி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணத்தில், பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களான சக்கரபாணி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில், ராஜகோபாலசாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் மாசிமகத்தையொட்டி கடந்த பிப்.26 தேதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் அந்தந்த கோவில்களின் சார்பில் பெருமாள் மற்றும் தாயார் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (6ம் தேதி) சக்கரபாணிசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரில், சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சக்கர ராஜா, சக்கரராஜா என கோஷமிட்டப்படி, தேரை வடம்பிடித்து இழுத்தனர். தெப்ப உற்சவம் இதேபோல் மாசிமகத்தையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவிலில் சாமி உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.