மானாமதுரை சோமநாதர் கோயிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் உலக நன்மைக்காகவும்,நல்ல மழை பெய்ய வேண்டியும் வருடந்தோறும் மாசி மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.நேற்று திருவிளக்கு பூஜையை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு 11 வகையான பொருட்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் மகளிர் உழவாரப்பணி தலைவர் சுசிலா தலைமையிலான மகளிர்கள் செய்திருந்தனர்.