மானாமதுரையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
மானாமதுரை: மானாமதுரை அருகே வலசை கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வலசை கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியை தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம்,சிவக்குமார், தருணேஷ்வரன் மற்றும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் P.தங்கமுத்து ஆகியோர் அங்கு களப்பணி செய்து கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், மானாமதுரை அருகே உள்ள வலசை கிராமப் பகுதியில் நத்தபுரக்கி செல்லும் தார் சாலை அருகே காட்டுப் பகுதியில் மழை பெய்து மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த முதுமக்கள் தாழி சற்று வெளியே தெரிய வந்துள்ளது.
முதுமக்கள் தாழிகள் என்பது பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர். இதைப் பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அல்லது உடலை எரித்த சாம்பலை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இப்படி புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது. மானாமதுரை பகுதியில் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இந்த முதுமக்கள் தாழி உள்ளது என்று கூறினர்.