ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது : பக்தர்கள் அதிர்ச்சி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவது வழக்கம். அதன்படி விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். ஆனால் நேற்று அதிகாலையில் திடீரென அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தும், கடல் சிற்பிகள், மீன் குஞ்சுகள் பாறை இடையே கிடந்த குறைந்த கடல்நீரில் தத்தளித்தது. தீர்த்தம் உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், சற்று தூரத்தில் நீராடி சென்றனர். காலை 11:30 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும், அக்னி தீர்த்தம் இயல்பு நிலைக்கு திரும்பியது.