உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா நேற்று மாலை மவுலீதுடன் துவக்கம்: மே 31ல் கொடியேற்றம்

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா நேற்று மாலை மவுலீதுடன் துவக்கம்: மே 31ல் கொடியேற்றம்

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா நேற்று மாலை துவங்கியது. பிரசித்தி பெற்ற இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா நடந்து வருகிறது. 849 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா துவக்க நிகழ்ச்சி நேற்று மாலை 6:30 மணி அளவில் மவுலீது (புகழ் மாலை) ஷரீப் தர்கா மண்டபத்தில் இருந்து ஏர்வாடி தர்கா ஹக்தார்களால் 23 நாட்கள் தொடர்ச்சியாக ஓதப்படும். அதனைத் தொடர்ந்து மே 30 ல் தர்கா வளாகம் முன்புறமுள்ள கொடி பீடம் அமைந்துள்ள இடத்தில் அடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மே 31 பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ணக் கொடி யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, தர்கா முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. ஜூன் 12 மாலை துவங்கி ஜூன் 13 அதிகாலை வரை மவுலீது ஓதப்பட்டு பின்னர் புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியுடன் சந்தனக்கூடு விழா நடக்கிறது. நாட்டிய குதிரைகள் நடனமாடியபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். ஏற்பாடுகளை ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையினர் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். விழாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !