கருப்பராயன் கன்னிமார் கோவில் கோவில் கும்பாபிஷேக விழா
பல்லடம்: பல்லடம் அருகே, கருப்பராயன் கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பல்லடம் அடுத்த, கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில், கருப்பராயன் கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, ஜூன் 8 அன்று காலை ஏழு முப்பது மணிக்கு கோ பூஜை, விநாயகர் பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி எடுத்தல், தீர்த்தம் கொண்டு வருதல், முதல் மற்றும் இரண்டாம் கால வேள்வி சுவாமி சிலைகள் கண் திறத்தல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை, 6.00 மணிக்கு மேல் தீர்த்த கலசங்கள் கோவிலில் வலமாக எடுத்து வரப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜைகள், தசதானம், தச தரிசனம் ஆகியவை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், மூலவர் கருப்பராயன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.