உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் கோவில் ராஜ கோபுரப்பணிகள் மும்முரம்

கொண்டத்து காளியம்மன் கோவில் ராஜ கோபுரப்பணிகள் மும்முரம்

பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலின் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் மற்றும் உபயதாரர்களின் பங்களிப்புடன் பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளில், 66 அடி உயரமுடைய ஐந்து நிலை ராஜகோபுரம் தற்போது உருவெடுத்து வருகிறது.

கோவிலை முழுமையாக புனரமைக்கும் திட்டத்துக்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ரூ.3.60 கோடி மதிப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம், ரூ.6.34 கோடியில் திருமாளிகை பக்தி மண்டபம், ரூ.2.42 கோடியில் வசந்த மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதற்கட்டமாக, 66 அடி உயரமும், 43 அடி நீளம், 23 அடி அகலமும் கொண்ட ராஜகோபுரத்தின் கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து தரமான கற்கள் வரவழைக்கப்பட்டு, 20-க்கும் மேற்பட்ட சிற்பிகள் குழுவாக இணைந்து பாரம்பரிய கல் சிற்பப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்திர வானம், பத்ம ஜெகதி, பட்டியல், கண்டம், கபோத பட்டியல் உள்ளிட்ட கோபுரத்தின் அடிப்பகுதிக்கான சிற்ப வடிவமைப்புகள் இயந்திர உதவியுடன் துல்லியமாக செதுக்கப்பட்டன. தற்போது அவை கோபுரத்தின் பேஸ் மட்டத்திற்கு மேல் பொருத்தப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் முதல், கோபுரத்தின் முதல் நிலையை உருவாக்கும் கண்டம் மற்றும் கபோத பட்டியல் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக ஸ்தபதி தெரிவித்தார். இதன் மூலம் ராஜகோபுரத்தின் மேல்தள கட்டுமானம் அடுத்த கட்டத்தை எட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !