வாலாஜாபாத் பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED :8 hours ago
வாலாஜாபாத்: வாலாஜாபாத், வெள்ளேரிம்மன் கோவில் கிராமத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் நேற்று தீமிதி விழா கோலாகலமாக நடந்தது.
வாலாஜாபாத் பேரூராட்சி, வெள்ளேரியம்மன் கோவில் பகுதியில் கிராமத்திற்கு சொந்தமான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத விழாவையொட்டி நேற்று காலை அப்பகுதி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையிலிட்டனர். தொடர்ந்து குடம் அலங்காரம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்தார். அப்போது, பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோவில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.