பிரகதீஸ்வரர் கோவிலில் பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலர் ஆய்வு
பெரம்பலுார்; கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு 2023- 2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் தொல்லியல் துறையின் சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்துமிடம், நுழைவு வளாகம், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றிற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவிலுக்கு வெளியே உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட 8.50 மீட்டர் உயரத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் உருவாக்கப்பட்ட நாயக்கர் கால ராட்சச யானை சிற்பத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, அரியலுார் கலெக்டர் ஆணி மேரிஸ்வர்ணா உட்பட பலர் உடனிருந்தனர்.