பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் தரிசனம் கட்டணம் இரு மடங்கு உயர்ந்தது
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் நுழைவு கட்டணம், அபிஷேக சீட்டு கட்டணங்கள் இரு மடங்கு உயர்ந்தது. குறைக்க வேண்டும் என மண்டகபடிதாரர்கள் தெரிவித்து வருகின்றனர். கவுமாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாளாகவும் மக்களுக்கு சகல ஐஸ்வர்யம் வேண்டிய வரம் வழங்கி அருள் பாலிக்கிறார். ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. ஜூலை 4ல் சாட்டுதலும், ஜூலை 10 கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழா துவங்குகிறது. முக்கிய திருவிழாவான ஜூலை 18ல் மாவிளக்கு உற்சவமும் மறுநாள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 25 ல் மறுபூஜை பாலபிஷேகம் நடக்க உள்ளது. இரு மடங்கு கட்டணம் உயர்வு: கோயிலுக்குள் செல்ல சிறப்பு நுழைவு கட்டணமாக ரூ.10 லிருந்து ரூ. 20 ஆகவும், நெய் தீபம் சீட்டு ரூ.5 லிருந்து ரூ.10, தேங்காய் பழம் அபிஷேக சீட்டு ரூ. 5 லிருந்து, ரூ.10, மாவிளக்கு சீட்டு ரூ.5 லிருந்து ரூ.10, குங்குமம் அர்ச்சனை சீட்டு ரூ.5 லிருந்து ரூ.10 என அனைத்து கட்டணங்களும் இரு மடங்கு உயர்ந்தது. மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் கட்டணத்தை குறைக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.