உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளிக்குடி அருகே முட்புதரில் 400 ஆண்டு பழமையான ஏழு கற்சிற்பம் கண்டுபிடிப்பு

கள்ளிக்குடி அருகே முட்புதரில் 400 ஆண்டு பழமையான ஏழு கற்சிற்பம் கண்டுபிடிப்பு

திருமங்கலம்; மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா தென்னம நல்லூரில் சுமார் 400 ஆண்டு பழமையான 7 கற்சிற்பங்கள் கண்டறியப்பட்டது.

மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் அனந்தகுமரன், சிவன் தென்னமநல்லூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கி பி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கற்கள் கண்டறியப்பட்டது. இதுகுறித்து கள ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் கூறியாதவது : இப்பகுதியில் மதுரையில் நாயக்கர் ஆட்சி காலத்தில் தென்னவன் என்ற குறுநில மன்னர் நிர்வாகம் செய்துள்ளார். அவர் பணியை பாராட்டி நாயக்கர் மன்னன் அவரின் பெயரில் தென்னவன் நாடு என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் தென்னம நல்லூர் பெயர் மாறியது.

சதி வழக்கம்: இறந்துபோன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்த பின் அவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் சதிக்கல் எனப்படுகிறது. இதில் கணவருடன் மனைவியும் இருப்பது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதை காட்ட கை உயர்த்தி இருப்பது போன்று, அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவாள். தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்ற சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பார். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்ற பொருள் உண்டு. உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாகப் போற்றி வணங்கினர். கணவன் மீது கொண்ட அன்பினாலோ, கட்டாயத்தினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது.

ஏழு சதிக்கல் : தற்போது ஊரின் கிழக்கு பகுதியில் நீரோடையில் அருகே முட்புதரில் புதைந்து இருக்கிறது. இச்சதிக்கற்கள் 3 அடி உயரம், 1.5 அடி அகலமும் கொண்டவை . கற்சிலை மேல் கூடாரம் அமைப்பு சாய்வாகவும், முக்கோண வடிவமாகவும் ,வட்ட வடிவமாகவும் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன . மொத்தம் ஏழு சதிக்கல் இருக்கிறது . பொதுவாக இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் சிற்ப வடிவத்தில் ஆணின் உருவம் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி வீரன் என்பதற்காக வலது கையில் வாள் கத்தி போன்ற பொறிக்கப்பட்டுள்ளது. ஆணின் சிற்பத்தின் அருகில் பெண் சிற்பம் அமைந்துள்ளது. பெண் சிற்பம் இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கியும் தனது வலது கையில் எலுமிச்சம் பழத்தை மடக்கிப் பிடித்து இருந்தால் அந்தப் பெண் சுமங்கலி என்ற அர்த்தத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற வடிவம் ஒரே இடத்தில் 7 சிற்பங்கள் காணப்படுகிறது. இச்சிற்பம் சதிக்கல் என அழைக்கப்படுகிறது .தற்போது சிற்பங்கள் தனியார் நிலத்தில் புதர்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !