திருமலைக்கேணியில் ஆனி கார்த்திகை பூஜை; மூலவருக்கு 16 வகை அபிஷேகம்
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஆனி மாத கார்த்திகை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி மூலவர் சுப்பிரமணியசாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, செந்துறை சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் உள்ள புனித தீர்த்தத்தில் புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். சர்வ அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதைப்போலவே வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.