வடமதுரை பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வடமதுரை: வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று காலை மண்டபடிதாரர் சரவணமூர்த்தி மற்றும் உடையாம்பட்டி கிராம மக்கள் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் வந்து கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் முடிந்ததும் காலை 10:00 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் இரவு அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும், மண்டகபடிதாரர் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 30ல் திருக்கல்யாணம், ஆக.1ல் தேரோட்டம், ஆக.3ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முருகன், தக்கார் விஸ்வநாத் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். கடந்த 2020 முதல் 3 ஆண்டுகள் கொரோனா, திருப்பணி காரணமாக தேரோட்டம் நடத்தப்படாமல் எளிமையான முறையில் கோயில் வளாகத்திற்குள் மட்டும் திருவிழா நடந்தது குறிப்பிடதக்கது.