உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூரில் சாதுக்கள் திடீர் உண்ணாவிரதம்

வடலூரில் சாதுக்கள் திடீர் உண்ணாவிரதம்

வடலூர்: வடலூரை மது, மாமிசம் இல்லாத புனித நகராக அறிவிக்க கோரி சன்மார்க்க சாதுக்கள் சங்கம் சார்பில் வடலூர் சத்திய ஞான சபை எதிரே உள்ள தனியார் இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை , சத்திய தர்ம சாலை ஆகியன உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரம் தினத்தன்று ஜோதி தரிசனமும், தை மாதத்தில் தைப்பூச ஜோதி தரிசனமும் விமர்சையாக நடைபெறும். விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம், உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொள்வார்கள். வள்ளலார் வாழ்ந்த வடலூரை மது, மாமிசம் இல்லாத புனித நகராக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வடலூர் சன்மார்க்க சாதுக்கள் சங்கம் சார்பில் சத்ய ஞான சபை எதிரே உள்ள தனியார் இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் சாது சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சாதுக்கள் அரிகிருஷ்ணன், ராஜா,சதீஷ், ராமலிங்கம், ஸ்ரீதர், உட்பட 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 8.00 மணி முதல் உண்ணாவிரதம் இருந்தனர். இது குறித்து தகவலறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க கூடாது. உரிய அனுமதி வாங்கி இருங்கள் எனக்கூறினார்கள். இதனையடுத்து 12.30 மணிக்கு முறையாக அனுமதி வாங்கி மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !