சதுரகிரியில் ஆடி பவுர்ணமி வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதி வறண்டு காய்ந்து காணப்படும் சூழலில் பக்தர்கள் யாரும் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர். மதியம் 12:00 மணி வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.