வினோத வழிபாடு; தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள்
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.
வடமதுரை அருகே கொல்லப்பட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்றுமுன்தினம் துவங்கி இன்று வரை திருவிழா நடக்கிறது. நேற்று காலை கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அமர்ந்தனர். பூசாரி லோகநாதன் வழக்கமான பாரம்பரிய வழிபாடுகளை முடித்து நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். பின்னர் சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் ஒவ்வொரு சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என கோஷமிட்டபடி இருந்தனர். கடந்த 2018 பின்னர் 5 ஆண்டுகள் இடைவெளியில் இங்கு நடந்த இந்த வினோத வழிபாட்டை காணவும், கோயிலில் வழிபடவும் என ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.