மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். இரவு 10.25 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் பூசாரிகள் மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்டை துவக்கினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பாடல்களை பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். இதில் டி.ஐ.ஜி., ஜியா உல் அக், கலெக்டர் பழனி, எஸ்.பி., சாங்சாய், திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.