உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனாதனம் குறித்த பேச்சு: விளக்கம் கேட்டு உதயநிதி, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சனாதனம் குறித்த பேச்சு: விளக்கம் கேட்டு உதயநிதி, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடில்லி: சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சர்ச்சை கருத்து தெரிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உதயநிதி மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னையில் சில நாட்களுக்கு முன்னதாக தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திராவிடர் கழகம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசும் போது, சிலவற்றை நாம் ஒழிக்க தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோன்று தான் சனாதனம்; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், சனாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதியின் பேச்சின் பொருள் எத்தகையது? என விளக்கம் கேட்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !