இன்று பவுர்ணமி, உமாமகேஸ்வர விரதம் ; மகேஸ்வரனை வழிபட நல்லதே நடக்கும்
வழிபாட்டுக்குரிய மிக சிறந்த நாள் பவுர்ணமி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேர்பார்வையில் வீற்றிருப்பர். கிரிவலம் வந்து வழிபடுவதால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். இன்று குடும்ப ஒற்றுமை மற்றும் சர்வ மங்களங்களும் உண்டாக்கும் உமா மகேஸ்வர விரதம். திருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். இன்று உமாமகேஸ்வரரை வழிபட நல்லதே நடக்கும்.