திருப்பரங்குன்றம் கோயிலில் தேங்காய் தொடும் முகூர்த்தம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி, கார்த்திகை திருவிழாக்களுக்கான தேங்காய் தொடும் முகூர்த்தம் நேற்று நடந்தது. கோயிலில் இருந்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மாலை, சந்தனம், குங்குமம் ஆகியவற்றுடன் மேளதாளத்துடன் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் அலுவலகம் சென்றனர். அங்கு உதவி கமிஷனர் சுரேஷ்க்கு மரியாதை செய்து, தேங்காய் பழம் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் தொட்டுக் கொடுத்தார். அவரிடம் சஷ்டி, கார்த்திகை திருவிழாக்களின் விவரங்கள் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டு திருவிழாவிற்கான நாட்கள் குறிக்கப்பட்டது. பின்பு கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு பூஜை முடிந்து யாக பூஜை நடந்தது. சஷ்டி திருவிழா நவ. 13ல் உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் ஆறுமுகம் கொண்ட சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடனும், கார்த்திகை தீப திருவிழா நவ. 18ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.