தீ விபத்து : ராமேஸ்வரத்தில் கோயிலில் திசா சாந்தி பூஜை
ADDED :737 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் மின்கேபிள் எரிந்த சம்பவத்திற்கு பரிகாரமாக கோயில் யாக வேள்வியுடன் திசா சாந்தி பூஜை நடந்தது.
அக்., 25ம் தேதி இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகம் அருகில் மின் கேபிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கோயில் வளாகத்தில் தீ பிடித்ததால், பரிகார பூஜை செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று கோயில் கல்யாண மண்டபத்தில் 5 யாக குண்டத்தில் வேள்வி வளர்த்து, 18 தீர்த்த கலசங்களுடன் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க திசா சாந்தி பூஜை நடந்தது. இதன்பின் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் ஊழியர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.