நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
திருநெல்வேலி: ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் கடந்த 29ம் தேதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடந்தது. தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அம்பாள் பவனி நடந்தது. தினமும் 2 வேளை சதுர்வேத பாராயணங்களும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 11வது நாளான நேற்று சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சிமண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 12வது நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வீதியுலா நடந்தது. இன்று (9ம் தேதி) மாலை முதல் 11ம் தேதி வரை தினமும் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 12ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷபவாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேசம் நடக்கிறது.