அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்; யாகசாலை பூஜைகள் துவங்கின
ADDED :1020 days ago
அழகர்கோவில் : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நாளை(நவ.,23) நடப்பதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின.
காலையில் வாஸ்து சாந்தி பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. இதில் மூலவர் சன்னதியிலிருந்து பூஜை செய்யப்பட்ட நுாபுர கங்கை தீர்த்தக்குடங்கள் 160 கலசங்களை பட்டர்கள் யாகசாலைக்கு எடுத்து வந்தனர். சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள், வேத விற்பன்னர்களுடன் யாகசாலை பூஜை மாலை 5:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து இன்று 2வது நாள் யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை காலை 9:15 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் தலைமையிலான அறங்காவலர் குழுவினரும், துணைகமிஷனர் ராமசாமி தலைமையில் அலுவலர்களும் செய்து வருகின்றனர்.