திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் அலைமோதிய பக்தர்கள்
திருக்கோவிலூர்; திருக்கோவிலூரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏரிக்கரைமூலை இரட்டை விநாயகர், ஆஸ்பிடல் ரோடு சுப்பிரமணியர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர், வீரபாண்டி வீரட்டானேஸ்வரர் சுவாமிகள் காலை 9:30 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க ஆஸ்தானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பாடாகி தென்பெண்ணையாற்றில் எழுந்தருளினர். ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் முடிந்து, தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்துள்ளி, மகா தீபாராதனை நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.