சூரனை வதம் செய்த அம்மன்: ராமநாதபுரத்தில் கோலாகலம்!
ADDED :4747 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் அக்.,15 முதல் 24 வரை நவராத்திரி விழா நடந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் நடந்தது. இரவு 7 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அரண்மனை முன்பு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி, நகரில் உள்ள குண்டுக்கரை முருகன், கோட்டை வாசல் விநாயகர், முத்தால பரமேஸ்வரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் உட்பட பல்வேறு உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக அரண்மனைக்கு முன்பு வந்தடைந்தன. ராஜ ராஜேஸ்வரி அம்மன் முன் செல்ல, அதனை தொடர்ந்து மற்ற சுவாமிகள் பின் தொடர்ந்து மகர்நோன்பு பொட்டலை அடைந்தன. அங்கு வான வேடிக்கை முழங்க, இரவு 9.30 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன், அம்பு எய்தி சூரனை வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.