உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலசந்தி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 6:30 மணிக்கு, பட்டி விநாயகர் கோவிலில் இருந்து புனித மண் எடுத்து வரப்பட்டது. காலை, 8:00 மணிக்கு, மூல மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, கொடிமரம் மற்றும் பஞ்ச மூர்த்தி களுக்கு சோடஷோபசார தீபாராதனை நடந்தது. அதன்பின், பஞ்சமூர்த்திகள் கோவில் உட்பிரகாரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்‌. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் வரும், 21ம் தேதி நடக்கிறது. இந்தாண்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சுவாமி, கோவிலுக்கு வெளியே வராது என்பதால், சிறு தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், கோவில் உள் பிரகாரத்தில், தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !