திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக இன்று தீர்த்த உற்ஸவம் நடந்தது.
மார்ச் 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 28, தேரோட்டம் மார்ச் 29ல் நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு இன்று கோயில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, கற்பக விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தரதேவர் எழுந்தருளினர். மார்ச் 15முதல் நடந்த யாகசாலை பூஜை இன்று காலை நிறைவு செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்து அஸ்தரதேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு திருவிழா நம்பியார் சிவாச்சாரியார் அஜித் சுந்தர சுப்பையா, தண்ணீரில் அஸ்தரதேவரை கொண்டு சென்று தீர்த்த உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.