இரவு முழுவதும் பயணித்து மதுரை வந்தார் கள்ளழகர்; பக்தர்கள் பரவசத்துடன் எதிர்சேவை
மதுரை: கள்ளழகருக்கு எதிர்சேவை: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில் அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் நேற்று (ஏப்., 21) கள்ளழகர் புறப்பட்டார். பக்தர்கள், கோவிந்தா என்ற முழக்கத்துடன் அழகரை வழி அனுப்பினர். இரவு முழுவதும் பயணிக்கும் கள்ளழகர், இன்று காலை மதுரை வந்தடைந்தார். கள்ளழகருக்கு மதுரை புதுார் மூன்றுமாவடியில் பக்தர்களின் எதிர்சேவை நடந்தது. நாளை (ஏப்., 23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர்.