நத்தம் குமரபட்டி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நத்தம், நத்தம் அருகே குமரபட்டி பகவதி அம்மன்,வெற்றி விநாயகர், பழனி ஆண்டவர் கோவில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் திருமறை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனி பூஜை, வாஸ்து சாந்தி, திக் பந்தனம், பிரவேச பலி, விருச்சகிரணம், அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், முதற்கால யாகசால பூஜை ,வேத பாராயணம், திருவியாகுதி, மூல மந்திரஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகளுக்கு பின் ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த காசி, ராமேஸ்வரம், அழகர்மலை, கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்ததக்குடங்கள் மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புனித தீர்த்தமும், பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குமரபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.