திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவர்களுக்கு சாந்தி விழா
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா நிறைவை அடுத்து பஞ்சமூர்த்திகளுக்கு உற்ஸவர் சாந்தி விழா நடந்தது.குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெற்றது. மே13 ல் கொடியேற்றத்தின் போது, கொடிமரத்தினருகே திருத்தளிநாதர், சிவகாமியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர், விநாயகர் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. தினசரி மண்டகப்படி தீபாராதனை நடந்து உற்ஸவர் திருவீதி உலா நடந்தது. 9 ம் நாளில் தேரோட்டம், 10 ம் நாளில் தெப்ப மண்டபம் எழுந்தருளல் நடந்து விழா நிறைவடைந்தது. நேற்று மாலை 5:30 மணி அளவில் நடராஜர் சன்னதி முன்பாக அஸ்திரதேவர், ஐம்பெரும் மூர்த்திகள் எழுந்தருளினர். உற்ஸவர்கள் விழா அலுப்பு தீரவும், குளிர்விக்கவும், சாந்தப்படுத்தி அடுத்த விழா வரை ஓய்வளிக்க சாந்தி விழா நடந்தது. சிவாச்சார்யர்களால் உற்ஸவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பால்,இளநீர்,பன்னீர் போன்ற திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் அன்னம் படையலிட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர்கள் தங்கள் சேர்க்கை அடைந்தனர்.