சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி
மானாமதுரை: மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்களின் கோஷ்டி கானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சந்நிதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறும். நேற்று முன்தினம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் காலை 7 மணிக்கு தீபாராதனையுடன் ஆராதனை விழா தொடங்கியது.இதனைத் தொடர்ந்து ஏராளமான இசை கலைஞர்களின் வாய்ப்பாட்டு,மிருதங்கம்,வயலின்,வீணை உள்ளிட்ட கச்சேரிகள் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.2ம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் அமைந்துள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சந்நிதியில் 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்று ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூஜை உஞ்ச விருத்தி, குரு அஞ்சலி,கோஷ்டி கானம்,விக்னேஸ்வர, வடுக, கன்யா,சுவாசினி, தம்பதி பூஜைகள் மற்றும் தீபாராதனை, ஆஞ்சநேயர் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்தனர். .