வைகுண்ட பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம்
ADDED :670 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று காலை துவங்கியது. இதில், அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள், கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் ராஜ வீதிகளில் உலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இதில் மூன்றாம் நாள் உற்சவமான நாளை காலை கருடசேவை உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான ஜூன் 7ம் தேதி காலை தேரோட்டமும், ஜூன் 9ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமானம் உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.