திருப்பதியில் பவித்ரோற்சவம் ; வரும் 18ம் தேதி கல்யாண உற்சவம் ரத்து
ADDED :693 days ago
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானோர் படையெடுக்கின்றனர். இலவச தரிசனத்திற்கு,கியூ காம்ப்ளக்சில் இருந்து, 5 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கூட்டம் வரிசைகட்டி நிற்கிறது. திருமலை கோவிலில், ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் சிறப்பாக நடைபெறும், இந்தாண்டு திருப்பதியில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு 17ம் தேதி இரவு வரை கோவில் சம்பங்கி பிரகாரத்தில் வேத நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனால் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள கல்யாண உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பவித்ரோற்சவம் நடைபெறும் 3 நாட்களிலும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.