புரட்டாசி 4ம் சனி வார விழா; கோயில்களில் சிறப்பு பூஜை
ஆண்டிபட்டி; புரட்டாசி 4ம் சனி வார விழாவை முன்னிட்டு கோயில்கள் சிறப்பு பூஜை நடந்தது. ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை முதல் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பெருமாளை வழிபட்டுச் சென்றனர். கதலி நரசிங்கபெருமாள், பரிவார தெய்வங்களான சக்கரத்தாழ்வார் விநாயகர், கருடாழ்வார், காலபைரவர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சக்கம்பட்டி கிழக்குத்தெரு ராஜா, மந்திரி வகையறா சார்பில் சக்கம்பட்டியில் உள்ள மருதகாளியம்மன் கோயில், பஞ்சமுக விநாயகர் கோயில், மங்கள விநாயகர் கோயில், ராஜவிநாயகர் கோயில் உட்பட முக்கிய இடங்களில் பெருமாள் குறித்த பஜனை பாடல்கள் பாடி ஊர்வலம் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.