கடல் அடைத்த பெருமாள் கோபுரத்தில் மரக்கன்றுகளால் சிற்பங்களுக்கு ஆபத்து
ADDED :292 days ago
தேவிபட்டினம்; தேவிபட்டினம் நவபாஷாண கோயில் எதிரில் கடல் அடைத்த ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டி நவபாஷாணத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிய பின் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் இக்கோயிலுக்கு தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில் கோபுரத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிற்பங்களுக்கு இடையில் மரக்கன்றுகள் வளர்கின்றன. கோபுரத்தில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கோபுரத்தின் சிற்பங்கள் மரக் கன்றுகளின் வேர்களால் சிதிலமடைந்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோபுரத்தில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.