பழநி முருகன் கோயிலில் நகரத்தார் காவடி குழு தரிசனம்
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவிற்காக பாதயாத்திரையாக வந்த நகரத்தார் காவடி குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியிலிருந்து நகரத்தார் காவடி குழுவினர் பாரம்பரியமாக ஆண்டு தோறும் வருகின்றனர். 400 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை கடைபிடித்து வரும் குழுவினர் இம்முறையும் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்தனர். அரண்மனை பொங்கல் ஐயா தலைமையில் மாட்டு வண்டியில் வைரவேல் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. 330 மயில் காவடிகள் கொண்டுவரப்பட்டன. வழிகளில் காவடிகளுக்கு சிறப்பு வரவேற்பு, பூஜைகள் நடைபெற்றது. பழநிக்கு பிப்.,10 வந்த அவர்கள் ஆவணி மூல வீதியில் உள்ள மடத்தில் வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன் பின் நேற்று காலை முருகன் கோயிலுக்கு காவடிகளுடன் சென்று தரிசனம் செய்தனர். இன்று தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகு பாதயாத்திரையாக மீண்டும் சொந்த ஊருக்கு செல்வர்.