மகாசிவராத்திரி; திருவானைக்காவல் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
திருச்சி; பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக திகழும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிவன் ராத்திரி வழிபாடு நடைபெறுகிறது. அதில், பங்கேற்பதற்காக, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவர் கூறியதாவது: சித்திரை மாதம் தொடங்கி மாதம் வரை பல்வேறு உற்சவங்களை, நோன்புகளை, பூஜைகளை செய்து வருகிறோம். மனித மனம் தூய்மை பெறுவதற்கும், சஞ்சலமற்ற ஸ்திரமான பக்தியுடன் வாழ்வதற்கும், நல்ல காரியங்களை செய்து சாதிப்பதற்கும் இறைவன் அருள் பலத்தை அளிக்கிறது. இறைவன் அருளை பெறுவதற்கு, தமிழகம் துவங்கி அனைத்து சிவாலயங்களில் சிவராத்திரி வழிபாடு நடத்தப்படுகிறது. சிவராத்திரி தினமான இன்று கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியில் சிவாலய ஓட்டம் என்று ஸ்ரீ ருத்ரதில் சொல்லப்பட்ட ஓடி ஓடி சென்று கோவிலில் தரிசனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் திருஞானசம்பந்தர் நாவுக்கரசர் மாணிக்கவாசகர் போன்றவர்களால் பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் உள்ளன. அத்தகைய தலங்களில் சிவன் ராத்திரி நாளில் வழிபட்டு, சிவபெருமான் அருளால் நல்ல ஞானத்தை பெற்று மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.